தென்கொரியா சென்ற இவர்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினர். படப்பிடிப்பு நடக்கும் போதே டெல்லியில் இவர்களுடன் இணைந்தவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். இதுபற்றி தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்டிருக்கிறார்கள். வேறொரு பணிக்காகப் போயிருக்கிறார்கள்; வந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பை முடித்து விட்டு அனைவரும் நேற்று இந்தியா திரும்ப விமான நிலையம் வந்தனர்.
அப்போது இவர்களுடன் டெல்லியில் இணைந்த 29 பேரைக் காணவில்லை. ஜாயிண்ட் விசாவில் சென்றுள்ளதால் அனைவரும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிக்க முடியும் என்று கொரியா ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு படப்பிடிப்பிற்காக சென்ற அனைவரையும் ஏர்போர்ட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர். இதனால் நடிகை லக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொரியா ஏர்போர்ட்டில் தவித்து வருகிறார்கள். இது பற்றி பெப்சி அமைப்பிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மகள் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டது பற்றி நடிகை பபிதா கண்ணீர் மல்க கூறியதாவது: என் மகளை தனியாக எந்த நாட்டுக்கும் அனுப்ப மாட்டேன். இப்போது அவளின் தந்தை ஜூடோ ரமேசும் உடன் சென்றுள்ளார். அவர்தான் அந்தப் படத்தின் சண்டை இயக்குனர். படத்துக்காக 30 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தோம். அதில் 6 நாள் கொரியாவில் படப்பிடிப்பு என்று அழைத்துச் சென்றார்கள்.
இதில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது. நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். தயாரிப்பாளர்கள், உடன் செல்லவில்லை. அவர்களை தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. என் மகள் நல்லபடியாகத் திரும்பி வர இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.








