Saturday, August 13, 2011

வெளியக தலையீடுகளற்ற சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

எந்தவொரு வெளியகத் தலையீடுகளும் இன்றி நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடமே சீனத் தலைவர்கள் இந்த வாக்குறுதியை அளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசிய சிறிலங்கா அதிபர், நேற்று சென்சென் நகரிலுள்ள விடுதி ஒன்றில் சீன அதிபர் ஹுஜின்டாவோவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாகவும், பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தும், போருக்குப் பின்னர் சிறிலங்கா எதிர்கொள்ளும் வெளியக அழுத்தங்கள் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போதே வெளியக அழுத்தங்களின்றி நல்லிணக்க முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு சீனா ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு எதிராக சிறிலங்காவுக்கு கைகொடுக்க சீனா தயாராக இருப்பதையே இவ்வாறு சூசகமாக வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேவேளை நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment